நெல்லிக்காய் – 12 இறுதி பாகம்

அனைவரின் ஆசிகளுடன், வாழ்த்துக்களுடனும் சீரும் சிறப்புமாக அருண்-தீபாவின் திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வாரம் தீபாவின் வீட்டிலும், அவள்

உறவினர்கள் வீட்டிலும் பலமாக விருந்து நடைபெற்றது. அடுத்த வந்த வார இறுதியில் தம்பதிகள் இருவரும் அருணின் சித்தப்பா வீட்டில் ஏற்பாடு செய்த விருந்திற்கு சென்றிருந்தனர்.

அங்கே அவனுக்கு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் தங்கையும், பதினோராம் வகுப்பு படிக்கும் தம்பியும் இருந்தார்கள். காலை டிபன் முடிந்து அனைவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தனர். சித்தப்பா வெளியே செல்ல…

“அம்மா… நீ போய் சீக்கிரம் சமைமா. நாங்க அண்ணன்டயும், அண்ணிட்டயும் பேச வேண்டியது நிறைய இருக்கு” அருணின் தங்கை சுமதி.

“அப்படி என்ன பேச போறிங்க ரெண்டு பேரும்?”

“சாப்ட்வேர் கம்பெனில எப்படி வேலை செய்வாங்கனு கேட்டு தெரிஞ்சிக்க போறோம். அதெல்லாம் உனக்கு புரியாதுமா. நீ சீக்கிரம் போய் சமை.

இவனுக்கு இப்பவே பசிக்குதாம்” அருகிலிருக்கும் தம்பியை காட்டி சொன்னாள்.

“ஆமாமா. எனக்கு இப்பவே பசிக்குது. நீ சீக்கிரம் போய் சமைமா” தம்பி கௌதம்.

“சரிடா கண்ணு. அம்மா சீக்கிரம் ரெடி பண்ணிடறேன்” சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றாள் அருணின் சித்தி.

“அப்பாடா… அம்மா போயிட்டாங்க. இப்பதான் ஜாலியா பேச முடியும். அண்ணி நீங்க அண்ணனை முதல்ல எங்க பார்த்தீங்கனு ஞாபகம் இருக்கா?”

“அடிப்பாவி இதுக்கு தான் சித்திய உள்ள போக சொன்னியா?” வேகமாக கேட்டான் அருண்

“அண்ணா. நான் உங்கிட்ட கேக்கல. நீ சும்மா இரு. நீங்க சொல்லுங்க அண்ணி” ஆர்வமாக கேட்டாள் சுமதி

முகத்தில் வெட்கத்துடன் பேச ஆரம்பித்தாள் தீபா… “பெங்களூர்ல… சிவாஜி நகர்ல”

“பராவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கியே” செல்லமாக பேசினான் அருண்

“அப்படினா… நீங்க வேலைக்கு சேறதுக்கு முன்னாடியே பழக்கமா?” முன்பை விட ஆர்வமாக கேட்டாள் சுமதி

“பழக்கம் தான்.. ஆனா அது வேற மாதிரி” கொஞ்சம் ஸ்டைலாக பதில் சொன்னான் அருண்

“அண்ணா.. நீ பேசன அவ்வளவுதான். நான் அவுங்ககிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன்” கொஞ்சம் சீரியஸாக பேசினாள் சுமதி

“சரி. அப்ப நான் வெளிய போயிடுவா?”

“உனக்கும் கேள்வி வரும். அப்ப நீ பதில் சொன்னா போதும். ஓகேவா?”

“சரிம்மா…”

“நீங்க சொல்லுங்க அண்ணி. அண்ணன் அன்னைக்கு உங்ககிட்ட என்ன பேசினாரு?
தீபா நீ அழகா இல்லைனு நினைக்கிறேன். உன்னை எனக்கு பிடிக்கல. நான் உன்னை காதலிக்கல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கனு
சொன்னாரா?”

“யாரு உங்க அண்ணனா? கிழிஞ்சிது. நான் அங்க பாவமா இருந்த பசங்களுக்கு இட்லி வாங்கி கொடுத்தது பிடிக்காம இதெல்லாம் பண்ண கூடாதுனு

அப்பவே அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு”

“ஏய் நான் அதிகாரம் எல்லாம் பண்ணல. அது தப்புனு தான் சொன்னேன்” வேகமாக சொன்னான் அருண்

“எது தப்பு? பாவமா இருக்கற பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது தப்பா?” தீபாவிற்கு துணைக்கு நின்றாள் சுமதி

“சரி நான் பேசல. நீங்களே பேசுங்க. நான் அப்பறமா சொல்றேன்” சூழ்நிலை சரியில்லாததால் ஒதுங்கி கொண்டான் அருண்.

“அப்பறம் நீங்க அண்ணனை பத்தி என்ன நினைச்சீங்க அண்ணி”

“வேண்டாம்மா… அத சொன்னா இங்கயே பிரச்சனையாயிடும்”

“அண்ணி.. அண்ணன் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. அதுவும் அப்ப அவர் உங்களுக்கு தெரியாதவர் தானே. தாராளமா சொல்லுங்க”

“இப்படி அதிகாரம் பண்றானே. இவனுக்கு பொண்டாட்டியா வரவ பாவம்னு நினைச்சுக்கிட்டேன்”

“அப்பறம்”

“அப்பறம் என்ன மறுபடியும் குருப் டிஸ்கஷன்ல பார்த்தேன்”

“வாவ்!!! ரெண்டு பேரும் எதிர் அணிதானே”

“பின்ன… நான் கொடுத்த தலைப்பு வேண்டாம்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தனவுடனே எனக்கு கோபம் தாங்கலை. ஆனா எல்லார் பேரையும் நியாபகம் வெச்சி பேசனவுடனே கொஞ்சம் அசந்துட்டேன். மேல் மாடில கொஞ்சம் கொஞ்சம் இருக்கு அதனால தான் தலைகனம்னு

நினைச்சிக்கிட்டேன்”

“ஓ! சரி… அண்ணா இப்ப நீ சொல்லு… அண்ணி அதுல என்ன பேசினாங்க?”

“அதுவா… முதல்ல நான் இவளை எப்படியாவது தோக்க வைக்கணும்னு தான் தலைப்பையே மாத்தினேன். ஆனா இவ பேசாமலே இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி… பேசினா எப்படியும் சண்டை போட்டு ஜெயிக்கலாம்னு பார்த்தேன். ஆனா இவ பேசவே இல்லை. அதனால கடைசியா

முடிவுரை கொடுக்க சொன்னேன். அதுல எல்லாரும் அசர மாதிரி பேசினா”

“அப்பவே உனக்கு பிடிச்சி போச்சா?”

“அதெல்லாம் இல்லை… எப்ப புடிச்சிதுனு கரெக்டா சொல்ல தெரியாது”

“அண்ணா.. பொய் சொல்லாத. ஒழுங்க சொல்லு”

“நிஜமா. வேணும்னா உங்க அண்ணியையே கேட்டு பாரு”

“அண்ணி நீங்க சொல்லுங்க. அண்ணனை உங்களுக்கு எப்ப பிடிச்சிது?”

“அப்படி ஒரு இடத்தை சொல்ல முடியாது. நிறைய இடமிருக்கு…”

“அண்ணி கொஞ்சம் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்”

தீபா அருணை தர்ம சங்கடமாக பார்க்க… அவன் கண்களாலே சம்மதமளித்தான்…

“நான் போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே என்னை ராஜிக்கூட உக்கார வைச்சது, ராஜியையும் கார்த்தியும் சேத்து வெச்சது, ஒரு பொண்ண வண்டீல உக்கார வெச்சி ஓட்டறதுக்கு கூச்சப்பட்டது, எனக்கு அடிப்பட்டவுடனே கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டது. எங்க அம்மாவை எந்த வேலையும் செய்யவிடாம ஹாஸ்பிட்டல பாத்துக்கிட்டது. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்…” சொல்லிவிட்டு அருணை பார்த்து அவள் புன்னகைத்தாள்.
அருணும் சந்தோஷத்தில் வானில் பறந்து கொண்டிருந்தான்…

“அண்ணி நீங்க போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே வேற ஒருத்தவங்கள உங்க பக்கத்துல உட்கார சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வரல”

“எனக்கு கோபம் தான். முதல்ல பாதி நாள் நான் தப்பா தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். இவர்கிட்ட பேசவே கஷ்டமா இருக்கும். என்னடா எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கானேனு கடுப்பா இருக்கும்… ஆனா போக போக புரிஞ்சிக்க ஆரம்பிச்சவுடனே எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு”

“ஆமாம் எதுக்கு இப்படி விசாரிச்சிட்டு இருக்க? நீ எதாவது பண்றியா? காலேஜ்ல படிக்கும் போது இதெல்லாம் பண்ணக்கூடாது. தப்பு. புரியுதா? அண்ணனாக மாறி தங்கைக்கு அறிவுருத்தினான் அருண்

“அதெல்லாம் இல்லைனா. எங்க காலேஜ் மேகசின்ல போட ஒரு கதை எழுதலாம்னு பார்த்தேன். சரி உங்க கதையே இண்ட்ரஸ்டிங்கா இருக்கேனு கேட்டுக்கிட்டு இருந்தேன்”

“அடப்பாவமே! காலேஜ் மேகசின்ல எதெல்லாமா போடுவாங்க?” தீபாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது…

“அதெல்லாம் போடுவாங்க… அந்த மேகசின் எடிட்டர் எங்க சீனியர்தான். என்ன பார்த்து எப்பவும் வழிஞ்சிக்கிட்டே இருப்பாரு. அதனால நான் போய் கொடுத்தா கண்டிப்பா போட்ருவாரு. சரி கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?”

“என்ன வைக்கலாம்?” அருணும் தீபாவும் யோசித்து கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரம் பார்த்து அருணின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பேப்பர் போட்டலம் இருந்தது.

“அப்பா கைல என்ன பொட்டலம்? பகோடாவா?” ஆர்வமாக விசாரித்தான் கௌதம்

“வர வழியில ஒரு பாட்டி நெல்லிக்காய் வித்துட்டு போச்சு. சரி இந்த வெயில்ல வித்துட்டு போகுதேனு வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க எல்லாம் சாப்பிடுங்க” வீட்டு மருமகளிடம் கொடுத்தார் சித்தப்பா…

“ஐயோ! அப்பா நெல்லிக்காய் கசுக்கும்பா. அதுக்கு பதிலா பகோடா வாங்கிட்டு வந்துருக்கலாம்” முகத்தில் வெறுப்புடன் சொன்னான் கௌதம்.

“நெல்லிக்காய் தாம்பா உடம்புக்கு நல்லது. அதுல விட்டமின் C இருக்கு.
அதுவுமில்லாம நெல்லிக்காய் சாப்பிடும் போதுதான் கசக்கும் சாப்பிட்டு முடிச்சு தண்ணி குடிச்சா அமிர்தம் போல இனிக்கும்

இதை கேட்டவுடன் அருண், தீபா, சுமதி மூவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்து கொண்டனர்…

நட்சத்திர நன்றி!!!

என்னடா நேத்து சொல்ல வேண்டியதை இன்னைக்கு சொல்றானேனு தப்பா நினைச்சுக்காதீங்க. சுத்தி இருக்குற மக்கள்ட எல்லாம் நல்லா பேசியே ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங். அதனால இந்த வீக் எண்ட் அதிகமா கம்ப்யூட்டர் முன்னாடி உட்காராம அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோடையும், ரூம் மெட் கூடயும் ரொம்ப நாளைக்கு அப்பறம் உக்கார்ந்து ஜாலியா பேசிக்கிட்டே இருந்துட்டேன். (வேற என்ன வெட்டிக்கதை தான் ;))

பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து கலக்கன இடத்துல நமக்கு ஒரு வாரம் இடம்னு சொல்லும் போது சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். ஆனா திடீர்னு ஒரு பயம் வந்துடுச்சு. இலக்கியமா எதுவும் நமக்கு எழுத தெரியாது. சமுதாயத்துல நடக்கிற தப்புக்கு என்ன காரணம்னு ஆராய்ச்சி பண்ணி அறிவுப்பூர்வமா எழுதவும் நமக்கு தெரியாது. கவிதை தெரியாது. அரசியல் தெரியாது. பொருளாதாரம் தெரியாது.

இப்படி எதுவும் தெரியாம எப்படி ஒரு வாரத்தை சமாளிக்கறதுனு ரொம்ப யோசிக்க வேண்டியதா போயிடுச்சு. நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.

இன்னும் எழுத நினைத்த சில முக்கியமான கட்டுரைகளும், நகைச்சுவை பகுதிகளும் வேலை பளுவினால் முடியாமல் போனது. இன்னும் ஒரு சில பதிவுகளில் இருக்கும் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் போனது. அவை அனைத்தையும் வரும் வாரங்களில் சரி செய்துவிடுகிறேன். (கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இனி தொடர்ந்து வரும்)

ஒரு வாரம் முழுதும் என்னால் தொடர்ந்து உற்சாகமாக எதையாவது எழுத முடிந்ததென்றால் அதற்கு முழு காரணமும் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் நன்றி. மேலும் எனக்கு இந்த வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நன்றிகள் பல.

தட்டுங்கள் திறக்கப்படும்!!!

எனக்கு பிடித்த வாசகங்கள்… (மலை சொற்பொழிவிலிருந்து)


துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்து கொள்ளுவார்கள்.

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.

இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

நான் உங்களுக்கு் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்கு பலனில்லை.

ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்.

நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.

ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?

மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும்.

ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுகொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்கு திறக்கப்படும்.

ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளை செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்…


நண்பர்கள் அனைவருக்கும் கிரிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

சூரியனுக்கு டார்ச் லைட்டு

எனக்கு பிடித்த வலைப்பதிவர்களையும் அவர்களது ஒரு சில பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்…

கார்த்திக் பிரபு
கவிதை எல்லாம் அருமையா எழுதுவாரு. வெகுளித்தனமா பெசுவாரு. (கல்யாணமாயிடுச்சில்ல அதுதான் கொஞ்சம் மரியாதை). இப்ப அவருடைய கல்யாண வைபவத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார் இந்த தொடர் மூலம்
நான் கணவனான போது

இவருடைய இந்த கவிதைகளை படித்த பிறகு பலர் அவர்களுடைய தாத்தா, பாட்டிகளை திட்டியதாக எனக்கு தகவல் வந்தது (அத்தை இல்லாத காரணத்திற்காக)
அத்தை பெண்கள் என்னும் ராகஷசிகள்

என்னுடைய லொள்ளு சீரிஸை போலவே இவருடைய இந்த லொள்ளும் எனக்கு பிடித்திருந்தது.
லொள்ளு

ராகவன்
இவருடைய இந்த பயணக்கட்டுரையில் பல சமூக கருத்துக்களையும் அள்ளி தெளித்திருப்பார் – கோவை குற்றாலமும் ஜான் ஆப்ரகாமும்

என்னுடைய பல நாள் வருத்தத்திற்கு பதில் சொன்ன பதிவு – என் கொங்கை நின் அன்பர்

கைப்புள்ள
இவருடைய சித்தூர்கட் செலவு சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
சித்தூர்கட் செலவு

இவருடைய ஆறு விளையாட்டு பதிவும் அருமையான ஒன்று – ஆறு

மேலும் இவருடைய பஸ் பயணங்களில், தடிப்பசங்கள் சீரிஸும் அருமையாக இருக்கும். ஒரு சின்ன ஆலோசனை, இந்த சீரிஸிற்கெல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்று போக ஹைப்பர் லிங் இருந்தால் இன்னும் பலனளிக்கும். மேலும் முகப்பில் இதையெல்லாம் தனியாக எடுத்து போட்டால் இன்னும் நலம்.

நாகை சிவா
இவருடைய பின் தங்கிய மாவட்டம் இவரின் மாவட்டம் பற்றிய இவரின் தெளிந்த பார்வையை காட்டும் – பின் தங்கிய மாவட்டம்

இவரின் “எப்படி கிடைத்தது” இவரின் தேச பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்தபதிவு – “எப்படி கிடைத்தது?”

ராம்
இவருடைய கைப்புள்ள காவியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று – “கைப்புள்ள காவியம்”

இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) – “நான் ஏன் மாத்தினேன்”

CVR– தமிழ்மணத்திலிருப்பவர்களுக்கு இவரை தெரியாது. என்னுடைய கதைகள் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இவரின் கதைகள் நிச்சயம் பிடிக்கும்.

சவுண்ட் பார்ட்டி
இவருடைய கிரிக்கெட் அனுபவம் பற்றிய இந்த பதிவை படித்தால் சிரிக்காமலிருக்க முடியாது – நானாத்தான் நாறிட்டனா?

பொண்ணுங்க இந்த மாதிரி கூட ஓட்டுவாங்களானு இதை படிச்சதுக்கப்பறம்தான் தெரிஞ்சது – மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்

Syam
இவருடைய மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்னுடைய ஆர்க்குட் அலும்பல்களை நினைவு படுத்தும் – மேட்ரிமோனியல் அட்வர்டைஸ்மெண்ட்

முதல் பதிவிலே கலக்க முடியுமா என்று நான் அசந்தேன். அதுவும் அமெரிக்கா வந்த புதிதில் நானும் இதையே அனுபவித்தேன் – ரிப்பீட்டு

இவருடைய காலேஜ் அனுபவமும் என்னை ரீல் சுத்த வைத்தது – தமிழ் மணமும் நானும்

தேவ்
இவருடைய கதைகளை போலவே எழுத வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை 😦

நீங்களும் படித்து பாருங்கள்

கதிரேசன் கதை

இதை படித்து இவருக்கும் எனக்கும் பெரிய விவாதமே நடந்தது (ஆன்லைனில்) – ஆஷிரா

சந்தோஷ்
எந்த ஒரு நியூஸையும் அருமையான தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் கொடுப்பார் – திருந்தவே மாட்டீங்களாடா நீங்க

இவருடைய முதல் வீடியோ பதிவு – தேசிய கீதம்

தம்பி
இப்படி ஒரு கேள்வி கேட்டுத்தான் தம்பி நமக்கு பழக்கமானார் 😉 –
தண்டவாலத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?

ரீல் சுத்த வைத்த பதிவு, என்னுடைய நகைச்சுவை பதிவுகள் பிடித்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் – வாலிப வயசு
(ஒரு பதிவிலிருந்து மற்றொன்றிற்கு லிங் கொடுத்தால் நன்றாக இருக்கும்

தம்பியின் மற்றொரு பரிமானம். வெளிநாட்டிலிருப்பவர்கள் இதை படித்தால் மனம் கனக்கும் – என் நண்பனுடன் ஒரு நாள்

திவ்யா
நம்மல மாதிரி பசங்களுக்கு பயனுள்ள பதிவு (ஓரளவுக்கு உண்மையாக இருப்பதாகவே நினைக்கிறேன்) – பெண்களை கவர்வது எப்படி?

ஓசியிலே யூத் ஃபுல்லான படம் பார்க்க – கல்லூரி கலாட்டா
(என்னுடைய நெல்லிக்காய் படித்தவர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும்)

ஜி
இந்த வாரத்தில் நான் மிகவும் ரசித்த நகைச்சுவை பதிவு. என்னுடைய கவுண்டரின் காமெடியை விட நன்றாக வந்திருந்தது – லொள்ளு சபா பல்லவன்

வசனமே இல்லாத அருமையான கதை – குறும்பன்

கப்பி (நான் பொறாமைப்படும் ஒரே பதிவர். வெரைட்டியிலும் அசத்துபவர்)

என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன் – இன்றும்

இப்படியெல்லாம் எழுத முடியுமானு நான் ஆச்சரியப்பட்ட பதிவு – பின்நவினத்துவ கனவு

இது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை – அந்த இரவு

கண்ணன் – கர்ணன்

நான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது.

அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெச்சி ஒரு சில தவறான முடிவு எடுத்தடறாங்க. அதுல என்னை ரொம்ப பாதிச்சது கர்ணன் படம்தான். கர்ணனை கண்ணன் ஏமாற்றி கொன்னுட்டார்னு நம்ம ஆளுங்களுக்கு கண்ணனை பிடிக்காம போயிடுது. இதுல கொடுமை என்னன்ன அவரை பிராடு, ஏமாற்றுக்காரர்னு நிறைய பேர் சொல்றத கேட்டுருக்கேன்.

நம்ம சினிமால சிவாஜி நடிச்சதால கர்ணனை அநியாயத்திற்கு நல்லவனா காண்பிச்சிருப்பாங்க. அதப்பத்தி பேசி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் பேச போவது கர்ணன் மரண தருவாயில் இருக்கும் போது கண்ணன் அவனுடைய தானத்தை எல்லாம் யாசகமாக ஏமாற்றி வாங்கி அவனை கொன்றுவிட்டான் என்ற குற்றச்சாட்டை பற்றியே பேச போகிறேன்.

கர்ணனின் மரணத்தை பற்றி வியாச பாரதத்தில் எவ்வாறு உள்ளது? அங்கே கண்ணன் வந்து கர்ணனுடைய தானத்தை யாசகமாக வாங்கினானா என்றால் இல்லை. போரில் கர்ணனின் தலையை கொய்தே அர்ச்சுணன் அவனை கொல்கிறான். அதுவும் கர்ணன் நிராயுதபாணியாக அந்த நேரத்தில் இல்லை. அவன் பிரம்மாஸ்திர பிரயோகத்தை யோசிக்க அந்த நேரத்தில் அவன் வாங்கிய சாபத்தால் அது அவனுக்கு மறக்கிறது. அந்த சமயத்திலே அவன் பார்த்தனால் கொல்லப்படுகிறான்.

சரி, இதையும் விட்டுவிடுவோம்… நாம் தமிழில் பார்த்த கர்ணன் படத்திற்கே வருவோம். கர்ணன் அம்புகளால் துளைக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். அங்கே அவன் செய்த புண்ணியம் அவனைக் காக்கிறது. இப்போழுது உங்களை பொறுத்தவரை கண்ணன் கர்ணனை ஏமாற்றி கொள்கிறான் இல்லையா???

அங்கே நடப்பதை நன்றாக பார்த்தால் உங்களுக்கே கண்ணனின் உயர்ந்த குணம் புரியும். கர்ணன் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகிறது. அங்கே கண்ணன் நினைத்திருந்தால் ஒரு அந்தணனையோ, அல்லது தேவேந்திரனை மீண்டும் வேடமிட்டு வர சொல்லியிருக்கலாம். யார் கேட்டாலும் கர்ணன் தானமளிக்கப்போகிறான். ஆனால் கர்ணனுக்கு புகழ் சேர்கக கண்ணனே வந்து யாசகம் வாங்குகிறான்.

மானிடருக்கும், தேவேந்திரனுக்கும் தானமளித்து பெரும் புகழ் பெற்ற கர்ணன் பரமாத்மாவிற்கே தானமளிக்க வழி செய்கிறான். அதுவும் கண்ணனாக சென்றிருந்தால் தாராளமாக கர்ணன் கொடுத்துவிடுவான். கண்ணனே நாராயணனின் அவதாரம் என்பது கர்ணனுக்கும் தெரியும்.

பரமாத்மா என்று அறிந்ததாலே அவ்வளவு எளிதாக அவன் தான் செய்த புண்ணியமனைத்தும் தானமளித்தான் என்று சுலபமாக அந்த வள்ளலை அனைவரும் குறைத்து மதிப்பிடக்கூடும். அதனாலே கண்ணன் ஏழை அந்தனனாக உருவெடுத்து போர்களத்தில் கர்ணன் முன் செல்கிறான். அதற்கு பிறகு அவனுக்கு பரமாத்வாவின் தரிசனம் கிடைக்கிறது. கிருஷ்ணனாக இருந்து அவதாரத்தை விட்டு வந்து நாராயணனாக மாறி தரிசனம் தந்து மீண்டும் கிருஷ்ணனாக மாறுகிறான். ரிஷிகளும், யோகிகளும், இந்திராதி தேவர்களும் எந்த தரிசனத்திற்காக அன்றாடம் ஏங்குகிறார்களோ அதை கர்ணனுக்கு அருளுகிறான்.

அர்ச்சுணனிற்கோ, தர்மனிற்கோக்கூட இந்த புகழ் கிடைக்கவில்லை. அவர்கள் மரணத்தின் போது நாராயணன் அவர்களுக்கு காட்சியளித்து மோட்சமளிக்கவில்லை. அதனால் கர்ணனுக்கு கண்ணன் அநியாயத்தை இழைத்தான் என்று சொல்வது நம் அறியாமையே!!!

பாண்டவர்கள் தவறே செய்யாதவர்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்த தவறிற்கு தான் அவர்கள் 12 ஆண்டுகள் வன வாசமும் ஒரு வருடம் அஞ்ஞானவாசமும் மேற்கொண்டனர். முதலில் மனதிலிருக்கும் இரும்பு திரையை விலக்கி பாருங்கள்.

மேலும் கண்ணன் நினைத்திருந்தால் போரில் ஆயுதமேந்தியிருக்கலாம். சுதர்சன சக்கரத்தை எதிர்க்க உலகில் எதுவும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அவன் போரில் ஆயுதமேந்தாமல் வேறும் சாரதியாகவே இருந்தான். ஒரு சமயத்தில் ஆயுதமுமெந்தினான். அதுவும் பக்தருக்காகவே.

போரின் இரண்டாம் நாள் அர்ச்சுணனின் சினத்தை கட்டுப்படுத்த முடியாமல் கௌரவர்கள் அஞ்சினர். பீஷ்மர், துரோனர் இருவருடைய ரதங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. போரின் முடிவில் கௌரவர்களுக்கு பெருத்த நஷ்டம். அன்று இரவு துரியோதனன் பிதாமகரை சந்தித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து, பாட்டனார் மேல் சந்தேகத்துடனும் பேசினான்.

அதை கண்டு கொதித்த பிதாமகர், போரில் கண்ணன் ஆயுதமேந்தாதவரை நம்மை கண்டிப்பாக அவர்களால் வெல்ல முடியாது என்று சொல்லவே அமைதியாகிறான் துரியோதனன். பிதாமகரின் வாக்கை காக்க தன் வாக்கை மீறி போரின் மூன்றாம் நாள் ஆயுதமேந்துகிறான் கண்ணன். அதையும் மற்றவர் உணராவண்ணம் பார்த்தன் மேல் கோபப்பட்டு பிதாமகரை தாக்குவது போல் நடிக்கிறான்.

மேலும் போரில் பழியை அவனே ஏற்கிறான். காந்தாரியின் சாபத்தையும் ஏற்று அவன் குலமே அழியும் பாவத்தையும் ஏற்கிறான். இப்படி பக்தருக்காகவே வாழ்ந்து பழியையும் சாபத்தையும் ஏற்கும் கண்ணனுக்கு போரினால் குண்டுமணி அளவு பலனுமில்லை. நியாயத்தை நிலைநாட்டுவதை தவிர…

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்

நீங்க இப்ப பாக்கறது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate part – 3

இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் தமிழக மக்களின் மனதில் மன்மத ராசாவாக இடம் பெற்றிருக்கும் தனுஷ்…

க: வாங்க தனுஷ்!
தனுஷ் அது எப்படிங்க உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கும் போது இந்த சின்ன வயசுல நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.

த: எனக்கு சின்ன வயசுல இருந்தே சீக்கிரம் கல்யாணமாகி வாழ்க்கையில செட்டில் ஆகணுங்கறதுதான் லட்சியம்

க: ஆஹா லட்சியமென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். அவனவன் படிச்சி வாழ்க்கையில பெரிய ஆளு ஆகனும்னு ஆசைப்பட்டா நீங்க சின்ன வயசுல இருக்கும் போதே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுங்கறத லட்சியமா வெச்சிருக்கறீங்க. அத வெக்கப்படாம வெளிய வேற சொல்லிட்டு அலையறீங்க.

த: ஆமாங்க. கடைசியா படிச்சி பெரிய ஆளாயி என்ன பண்ணப்போறாங்க? எல்லாரும் கல்யாணம் தானே பண்ணிக்க போறாங்க. அதனாலத்தான் நான் அதை சீக்கிரமாவே பண்ணிட்டேன்

க: ஏன்டா எல்லாரும் கடைசியா சாகத்தானே போறாங்க? அதுக்கு ஆசைப்படுவியா? பேசறாம்பாரு…பெரிய இடமா கிடைச்சிது, விட்டா போயிடும்னு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு பேசற எகத்தாளத்தப்பாரு.
ஆமாம் அது என்ன பேரு இந்திய ப்ரூஸ்லி?

த: அதுவா? நான் போடற கராத்தே சண்டைய பார்த்து ரசிகர்கள் அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

க: ஏன்டா ப்ரூஸ்லி ஒரு அடி அடிச்சா நீ தாங்குவியா? அவர் எப்படியும் செத்து போயிட்டாருங்கர தைரியத்தில நீயா வெச்சிக்கிட்ட. சரி விடு… அந்த காலத்துல தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் மாதிரினு வெச்சிக்கிறோம். சரி உன்னோட படத்துலயே உனக்கு பிடிச்சது எது?

த: சுள்ளான். அதுலதான் டைரக்டர் ரமணா என்னை ஆக்ஷன் ஹீரோவா காண்பிச்சாரு.

க: ஓ! நீயும் பசுபதியும் மாத்தி மாத்தி
டேய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு கத்துவீங்களே அந்த படமா?
ஏன்டா ஓவரா சவுண்ட் விட்டு நடிச்சா அது ஆக்ஷன் படமா?

த: அதுல பஞ்ச் டயலாக்லாம் வேற இருக்குமே!!!

க: ஓ! அதுவா? அந்த தீப்பந்தத்த எடுத்துட்டு வாங்கப்பா. தம்பிய சுட வைக்கலாம்

த: எதுக்குங்க?

க: நீ தான்டா சொன்ன! சுள்ளான் சூடானேன் சுலுக்கெடுத்துடுவேனு. எனக்கு கால்ல 2 நாளா சுலுக்கு அதான் உன்னைய சூடாக்கி சுலுக்கெடுக்க வைக்கலாம்னு பாக்கறேன்.

த: ஐயய்யோ அது சும்மா ரைமிங்கு பேசனதுங்க…

க: இந்த பாரு இனிமே சும்மா இப்படி மொக்கைத்தனமா பஞ்ச் டயலாக் ஏதாவது பேசின… அவ்ளோ தான். நான் எதுவும் பண்ண மாட்டேன். மக்களே படத்த ஃபிளாப்பாக்கிடுவாங்க…

த: அதுல க்ளைமாக்ஸ் காட்சி கூட அருமையா இருக்குங்களே!

க: டேய் வேணாம் என்னைய டென்ஷனாக்காத! அது ஒரு க்ளைமாக்ஸ் அதுக்கு உனக்கு பெருமை வேற…உன்னைய பேட்டியெடுக்கறதுக்காக என்னைய அந்த ட்ரீம்ஸ், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எல்லாம் வேற பாக்க வெச்சிட்டானுங்க. ஏன்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?

த: புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பார்த்தீங்களா? அது அப்படியே நம்ம உலகம் சுற்றும் வாலிபன் மாதிரியே இருக்குமே?

க: டேய் டூபாகூர் மண்டையா… அது உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இருந்துச்சா? இதுக்கு முன்னாடி நீ அந்த படம் பார்த்திருக்கயா? தப்பி தவறி இத வெளிய சொல்லிடாத… எல்லாம் கல்லால அடிச்சியே கொன்னுடுவானுங்க…

சரி இதுக்கு மேல நீ கேள்வி கேட்டா தாங்க மாட்ட. ஓடி போயிடு!!!

மக்களே! என்ன நடந்துச்சுனு நீங்களே பாத்துட்டுதான் இருக்கீங்க. நான் சொல்றதுக்கு இதிலே ஒண்ணுமில்லை.நாளைக்கு உங்களை வேற ஒரு பிரபலத்துடன் சந்திக்கிறேன்… நன்றி! வணக்கம்!!!

பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல்
———————————————-

இந்த சந்திப்பு இலக்கியத் தரமாக இல்லை என்று குற்றஞ்சாட்டி விடக்கூடாது என்பதற்காக, பதிவை இலக்கியத்தரமாக்கும் முயற்சியாக இரு கவிதைகள்:

சந்திப்புகள் என்பவை சுவருடைத்தல் – எஸ்.பாபு : ஈ – தமிழ் | பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்: சந்திப்புகள்

பத்மா அரவிந்த் பாஸ்டன் வரப்போவதாக தெரிய வந்ததுதான் இந்த சந்திப்புக்கு கால்கோள். பத்மா அரவிந்தை சந்திக்க பலரும் பிரியப்படவே, அதையே பாஸ்டன் வலைப்பதிவர் சந்திப்பாக ஆக்கலாம் என்னும் எண்ணம் எழுந்தது.

பத்மா வரப்போகிறார் என்று அறிந்தவுடன் இந்த வார நட்சத்திரம் (வெட்டிப்பயல்) பாலாஜியை தொடர்பு கொண்டு, நத்தார் தினத்தை முன்னிட்டு வரவேற்பு கொடுக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்தேன். அங்கிருந்து வி.பி. பாலாஜி மற்ற ஒருங்கிணைப்புகளை முழுவதுமாக கவனித்துக் கொண்டார். நியூ ஜெர்சியில் இருந்து கண்ணபிரான் ரவி ஷங்கரை வரவழைத்தார். சந்திப்பு களை கட்டியது.

யாரெல்லாம் வந்திருந்தார்கள்?

1. தேன் துளி பத்மா அரவிந்த்

2. மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர்

3. வெயிலில் மழை ஜி

4. வெட்டிப்பயல் பாலாஜி

5. பாடும் நிலா பாலு! சுந்தர்

6. Navan’s weblog நவன்

7. பார்வை மெய்யப்பன்

8. வேல்முருகன்

9. ‘பிரக்ஞை’ ரவி ஷங்கர்

10. அரை பிளேடு

கடைசி நேரத்தில் வர இயலாதவர்கள்:

1. Blogger: User Profile: சனியன்

2. வெற்றியின் பக்கம் வெற்றி

ஆத்திகம் எஸ்கே, செல்வன், சிகாகோவில் இருந்து தேன் சிறில் அலெக்ஸ், அட்லாண்டாவில் இருந்து சந்தோஷ்பக்கங்கள் சந்தோஷ் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்துக்களைப் பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாக டானிக்காகவும் இருந்தது.

என்ன பேசினோம்?

மதியம் 1 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், பின்னிரவு இரண்டு மணி வரை தொடர்ந்தது. இதனாலேயே பேசிய பலதும் மறந்து போகுமளவு ஆயிற்று. விளையாட்டுப் போட்டியை நேரடியாக, லைவ் ரிலேவாக ரசிப்பதுதான் சுகம். ஆடி முடித்து, முடிவு தெரிந்தபிறகு ஹைலைட்ஸ் பார்ப்பது பிடிக்கும் என்றாலும், ஆட்டத்தை, இருக்கை நுனியில் அமர்ந்து, நகம் பிய்த்துக் கொண்டு, ரீப்ளே கடுப்பாகி சுவைப்பது போல் வராது. வித்தியாசமான பந்துவீச்சுகளும், முக்கிய திருப்பங்களும் ஆளுக்கு ஆள் மாறுபடுவதில்தான் வல்லுநர் பார்வையே அடங்கியிருக்கிறது.

எனக்கு ஆரம்பத்தில் பேசின விஷயங்கள் மட்டுமே மனதில் நிற்கும் எனபதற்கேற்ப துவக்கத்தில் பிரக்ஞை ரவி பகிர்ந்த இரு கட்டுரைகளை சொல்லலாம்.

சோமாலியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுகிறார்கள். அன்னிய தேசம்; புரியாத மொழி. தங்கள் மொழி பேசுபவர்கள் மெயிண் (Maine) மாகாணத்தின் கிராமமொன்றில் இருப்பதை கண்டுபிடித்து அங்கு படையெடுக்கிறார்கள். ஏற்கனவே அங்கு வசிப்பவர்களும் சோமாலியர்கள்தாம் என்றாலும், அவர்கள் வேறொரு இனம். அவர்களை அடக்கியாண்ட இனத்தை சேர்ந்த அகதிகள் இப்போது தங்கள் மொழி பேசுபவர் அருகாமையை நாடி அந்த இடத்திற்கு அடைக்கலம் கோருகிறார்கள்.

ஏற்கனவே தங்களை அடக்கியாண்டவர்களுடன் என்ன உறவு வேண்டிக் கிடக்கிறது என்று ஒரு சாரார் கோபம் கொள்கிறார்கள். ‘இவர்கள் அடிமைகளாக இருக்க வாய்க்கப்பட்டவர்கள்தானே… இப்படிப்பட்டவர்கள் இன்றைய சூழ்நிலையிலும் மேலோர் ஆகிய நமக்கு உதவ வேண்டும்’ என்று காரசாரமான மாற்றுக் கருத்துடன் இன்னொரு சாரார்.

சமகாலப் பிரச்சினைகளுக்கு இது ஒரு தேர்ந்த ஒப்புமையாக இருக்கும் என்பதை நான் இங்கு எழுதியதை விட இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக விளக்கினார்.

பேச்சு சுவாரசியத்தில் அறிவார்ந்த முடிவெடுக்கும் திறனுக்கு திரும்பினோம். Rationale என்னும் பதமே கேள்விக்குறியது. வாழ்க்கையே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக artificial intelligence வல்லுநரும் அறிபுனை எழுத்தாளருமான எம்.ஐ.டி. பேராசிரியர் கருதுகிறார்.

‘தண்ணீர் மேலே விழுந்தால் குடை பிடிக்க வேண்டுமா?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறது ரோபோ.

‘ஆம்’

‘மழைக்கு சரி. ஆனால், காலையில் நீங்களே பூத்துவாலைக்கடியில் போய் நிற்கிறீர்களே! அப்போதும் நான் குடை பிடிக்கத்தானே வேண்டும்?’ மீண்டும் ரோபோவின் வினயமான லாஜிக்கலான கேள்வி.

சமீபத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை தருவதற்கு முதியோரை விட இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பது எனக்கு நினைவுக்கு வருகிறது. கிட்னி மாற்றினாலும், அறுவை சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்பு (இளமையை விடக்) குறைவு; மேலும் வாழ்ந்து முடித்தவர்கள் என்று rational-ஆக வயதானோரை தீர்த்துக் கட்டலாமா என்று விவாதம் சென்றது.

வலைப்பதிவுகள்

பெரும்பாலான பேச்சு இதை சுற்றியே அமைந்தது. பிடித்த வலைப்பதிவுகள் எது? ஏன் பிடிக்கிறது? எது பிடிக்கவில்லை?

எப்பொழுது படிப்பீர்கள்? எத்தனை நேரம் செலவிடுவீர்கள்? நண்பர் எழுதினால் படித்தே தீருவீர்களா? எப்படி ‘அதிகம் பார்வையிடப்பட்டவை’ ஆவது? எவ்வாறு வாசகர் பரிந்துரை நட்சத்திரங்களை ஏற்றுவது? பூங்கா, கில்லி பரிந்துரைகள் எவ்வாறு இருக்கிறது? புதிய பதிவர்களுக்கு உதவி எவ்வாறு கிடைக்கிறது?

வெளிப்படையாக எழுதுதல் அவசியமா? சாத்தியமா? வலைப்பதிவை எவ்வாறு மதிப்பிடுவது? எது சிறந்த பதிவாகக் கருதப்படும்? பார்வையாளர் எண்ணிக்கை முக்கியமா? பின்னூட்டங்களுக்கு மயங்கலாமா?

பதிவுகளில் என்ன எழுதுவது என்பது குறித்து எவருக்கும் சந்தேகங்கள் இல்லை.

பத்மா அரவிந்த்

சனி மாலையின் நட்சத்திர விருந்தினரான பத்மா மிகக் குறைவாகவே பேசினார். நல்ல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், சிறப்பான மேடைப் பேச்சாளராக இருக்க வேண்டாம் என்பது போல், அவ்வப்போது சன்னமான குரலில் எண்ணங்களை ஓடவிட்டார்.

கேம்பஸ் இண்டர்வ்யூ நேர்காணலில் நடக்கும் க்ரூப் டிஸ்கசன் போன்ற அடிதடி சூழலில், கவர்ச்சிகரமான தலைப்புகளும், புரட்சிகரமான தடாலடிகளும் மேலெழுந்தது. இன்னும் கொஞ்சம் பத்மாவை கேள்வி கேட்டு, அனைவரின் வினாக்களும் பதிலளிக்குமாறு அமைத்திருக்கலாம்.

பிரக்ஞை ரவி

தேர்ந்த சினிமா விமர்சகர்; மானுடவியலாளர் என்பதற்கு ஒப்ப, பல இடங்களில் விவாதங்களை ஒழுங்குப்படுத்தினார். பெண் வலைப்பதிவருக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார். அமெரிக்க இதழியலில் வெளிவரும் சினிமா விமர்சனங்களின் கூறுகளை சுவையாக விளக்கினார்.

‘எந்த ஒரு ஊடகமுமே ஆரம்பத்தில் தரத்தை கொண்டிருப்பதில்லை; உச்ச நிலையையும் எளிதில் அடைவதில்லை’ என்னும் கருத்து வலைப்பதிவுகளில் நிலவும் க்வாலிடி குற்றத்திற்கு சிறப்பான சமாதானமாக இருந்தது.

கண்ணபிரான் ரவி கேயாரெஸ்

விளையாட்டாக சென்ற தருக்கங்களையும் கிண்டல்களையும் பல இடங்களில் நேர்படுத்தினார். திடீரென்று உணர்ச்சிவேகமாகப் போய்விடும் தருணங்களில் ஸ்பாண்டேனியஸ் நகைச்சுவையால் இயல்பாக்கினார்.

  • ‘பதிவரின் வீட்டில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள் என்ன?’;
  • ‘பாலியல் குறித்த கட்டுரைகள், புனைவுகள் ஏன் மிக அரிதாகவே வலைப்பதிவுகளில் வெளியாகிறது?’
  • ‘ஆன்மிகம் என்றால் என்ன? ஏன் எல்லோரும் ஆன்மிகத்தை நாட வேண்டும்?’

    என்று பல சேரியமான வித்துக்களைத் தூவி உரையாடலை உற்சாகமாக்கினார்.

    மற்றவர்கள்

    ‘வெயிலில் மழை’ ஜி ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார். ‘வெட்டிப்பயல்’ பாலாஜி தன் கருத்துக்களை தெளிவாக முன்வைத்து ஜோராக உரையாடினார். கொஞ்சம் தாமதமாக வந்ததாலோ என்னவோ, நைட் வாட்ச்மேன் போன்று ஒரமாக நின்று கொண்டே ‘பாடும் நிலா பாலு’ சுந்தர் அமைதி காத்தார். அதிகம் வலைப்பதியாததால் ஒவர் ஹெட் ட்ரான்ஸ்மிஷன் ஆன சில நிகழ்வுகளை விழிப்புடன் நவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

    ‘பார்வை’ மெய்யப்பன் இன்னும் பல இடங்களில் தன் விரிவான வாசிப்பையும் பரந்துபட்ட அவதானிப்புகளையும் முன்வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். சபாநாயகராக வேல்முருகன் அதிகம் அறியாத தகவல்களை முன்வைத்து தன் கருத்துக்களை காரசாரமாக விவாதித்து சந்திப்புக்கு உரமூட்டினார். அரை பிளேடு பல மறுமொழிகளுடன் தருக்கங்களுக்கு பொருள் கூட்டினார்.

    கேட்க மறந்த கேள்விகள்

    ஏன் வலைப்பதிகிறோம்? எப்படி பதிவுகளை உருவாக்குகிறோம்? பதிவினால் என்ன சாத்தியாமாகும் என்று நம்புகிறோம்? வலைப்பதிவதால் என்ன கிடைக்கிறது? தொடக்கத்தில் கிட்டும் என்று நினைத்ததற்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள தூரம் என்ன? இன்றைய நிலையில் ஏன் தொடர்கிறோம்?

    அடுத்த சந்திப்புகளில் கருத்தில் கொள்ள சில ஆலோசனைகள்

    விவாதங்களை மூன்றாக பிரிக்கலாம். முதல் பகுதியில் அனைவரும் பங்கு கொள்ள அவசியம் வாய்ப்பு தரப்படும். கலந்துகொள்பவர்களின் கேள்விக்கு அனைவரும் தங்கள் எண்ணங்களைப் பகிர வேண்டும். ஒரு பதிவர் குறைந்தது ஒரு கேள்வியாவது கேட்க வேண்டும். ஒரு கேள்விக்காவது முதல் ஆளாக பதில் தர வேண்டும். ஆம்/இல்லை போன்று இல்லாமல் பதில்கள் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இரண்டாவது பகுதியாக வலைப்பதிவு சுவாரசியங்கள்: என்னுடைய பதிவில் வந்த ரசமான பின்னூட்டம், அதிக மறுமொழிகள் பெறுவது, வார்ப்புரு மாற்றுவது, மறுமொழி பெறுவது போன்ற அவசியமான துப்புகள். சந்தேக விளக்கங்கள். பல காலமாக எழுதித் தள்ளுபவரின் அனுபவ ஆலோசனைகள்.

    மூன்றாவதாக இலக்கியம், அரசியல், நாட்டுநடப்பு குறித்த விவாதங்கள்: கடந்த வருடத்தில் எந்தப் புத்தகம் முக்கியமானது? ரெஹ்மான் தமிழுக்கு துரோகம் இழைக்கிறாரா? ஈழம் குறித்து என்ன செய்கைகள் செய்யலாம்? எவ்வாறு நமது தொண்டு ஆர்வங்களை ஒருங்கிணைத்து பலப்படுத்தலாம்?

    கடைசியாக…

    என் மனைவிக்கு நன்றி.

    எங்களின் ஆழ்ந்த வலைப்பதிவர் வாக்குவாதத்தின் நடுவே ‘அடுத்து நான் என்னப்பா செய்யலாம்?’ என்று குதித்த குழந்தையை மேய்த்தது; சமோசா, சல்ஸா என்று விதம் விதமாகப் பரிமாறியது; சந்திப்புக்கு உறுதுணையாக நின்று, உவகையுடன் செயல்பட்டது. நன்றிகள் பல!

    அடுத்து…

    விட்டதை பங்கு கொண்ட மற்றவர்கள் தங்கள் பார்வையில் பகிர வேண்டும். நியூ ஜெர்சியில் சந்திப்பு போட வேண்டும்.

    – பாலாஜி
    பாஸ்டன்

  • கற்றதும்… பெற்றதும்

    சரி இதுவரைக்கும் கும்மியடிக்கற மாதிரி பதிவே போடலைனு ஃபீல் பண்றவங்களுக்காக இந்த பதிவு

    வலைப்பதிவர் சந்திப்புக்கு போனியே அங்க எதாவது பயனுள்ளதா தெரிஞ்சிக்கிட்டியானு நிறைய நண்பர்கள் கேட்டாங்க. சரி அவுங்களுக்கு மட்டும் எதுக்கு, உங்க எல்லாருக்கும் சொல்லிடலாமேனு பதிவா போடறேன்… சில பல இடங்கள்ல எனக்கும் இதுல இவ்வளவு மேட்டர் இருக்கானு தோணுச்சு… ஒண்ணு ஒண்ணா சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க

    எனக்கும் அங்க இருந்த மூத்த பதிவர்களுக்கும் நடந்த உரையாடல் மாதிரி போட்டிருக்கேன்… இதுல மூத்த பதிவரென்பது ஒரு ஆள் இல்லை. என்னை தவிர எல்லாருமே மூத்த பதிவர்ங்க தான்… (ஜி, கண்டுக்காதீங்க)

    எந்த நேரத்துல பதிவு போடலாம்?

    மூ.ப: வெட்டி, பொதுவா நீ எந்த நேரத்துல பதிவ போடுவ?

    வெ: எந்த நேரத்துலயா? டைப் பண்ணி முடிச்சவுடனே போட்டுடுவேன்.

    மூ.ப: அதான் எந்த நேரத்துல டைப் பண்ணுவ?

    வெ: எந்த நேரத்தில பண்ணுவோம்… ஆபிஸ்ல மதியம் ஒரு 3லருந்து 4 மணிக்குள்ளதான்…

    மூ.ப: உடனே பின்னூட்டம் வருமா?

    வெ: உடனே வராது. கொஞ்ச நேரம் கழிச்சுதான் வரும்.

    மூ.ப: அப்படியெல்லாம் பண்ணாத வெட்டி. நான் சொல்ற மாதிரி பண்ணு

    வெ: சொல்லுங்க… நோட் பண்ணிக்கிறேன்

    மூ.ப: அதிகமா வலைப்பதிவ படிக்கறவங்க இருக்கறது இந்தியாவிலயும், அமெரிக்காவிலயும் தான்… அதனால முடிஞ்ச அளவு இந்தியால பகல் பொழுதுல இல்லை அமெரிக்க (கிழக்கு) நேரத்துல ஒரு 9 – 10 மணிக்கா போடு. அப்பதான் நிறைய பேர் பார்ப்பாங்க. அப்பறம் முடிஞ்ச அளவு வார நாட்கள்ல போடு. வார இறுதியோ வெள்ளிக்கிழமையோ வேண்டாம்.

    வெ: பதிவ தமிழ்மணத்துல போடறதுல இவ்வளவு விஷயமிருக்கா?

    மூ.ப: இதெல்லாம் ரொம்ப அடிப்படைப்பா. இதுக்கூடவா தெரியாது?

    வெ: எதுவும் தெரியாம அப்பாவியாவே இருந்துட்டேன்.

    பின்னூட்டம்

    மூ.ப: சரி அதெல்லாம் இருக்கட்டும் வெட்டி. உனக்கு மட்டும் எப்படி பின்னூட்டம் அதிகமா வருது?

    வெ: அதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க. நம்மல மதிச்சி பின்னூட்டமிடறவங்க ஒவ்வொருவருக்கும் மதிச்சு நல்ல நண்பராக நினைச்சு பதில் சொன்னா போதும். பொதுவா முக்கால்வாசி பேர் அவுங்க பின்னூட்டத்துக்கு என்ன பதில் சொல்வாங்கனு வந்து பார்ப்பாங்க. அதனால நம்ம அவுங்களுக்கு சொல்ற பதில் அவுங்களை அடுத்த தடவை வர வைக்கற மாதிரி இருக்கணும். (They should feel comfortable)

    மூ.ப: ஓ! இதுல இவ்வளவு விஷயமிருக்கா?

    வெ: இது மட்டுமில்லைங்க. நம்ம திட்டி வர பின்னூட்டத்தக்கூட அப்படியே ஜாலியா மாத்திடணும். நம்ம நண்பர் ஒருத்தர் ப்ளாக்ல நான் பார்த்த கமெண்ட்

    Anony: Total time waste

    Blogger: ஏய் அனானி… என் ப்ளாக்ல வந்து யூஸ் ஃபுல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு பார்த்த இல்லை. உனக்கு நல்லா வேணும்.

    இந்த மாதிரி ஜாலியாக்கனாவே போதும்.

    மூ.ப: வெட்டி! இதுதான் நீ பின்னூட்டம் அதிகமா வாங்கர ரகசியமா?

    வெ: நான் ஒண்ணும் அதிகமா எல்லாம் வாங்கறதில்லைங்க. நம்மல விட அதிகமா வாங்கறவங்க நிறைய பேர் இருக்கறாங்க. ரசிக்கிற மாதிரி பதிவ கொடுக்கறதும் ஒரு முக்கியமான விஷயம்.

    மூ.ப: சரி. தமிழ்மண முகப்புல அதிக நேரம் நம்ம பதிவ எப்படி இருக்க வைக்கணும்னு தெரியுமா?

    வெ: அதுவும் ஒரு சின்ன டெக்னிக்தான். ராத்திரி படுக்கும் போது எல்லா பின்னூட்டத்தையும் பப்ளிஷ் பண்ணிடாதீங்க. ஒண்ணு ரெண்டு வெச்சிட்டு காலைல வந்தவுடனே அதை பப்ளிஷ் பண்ணுங்க. அப்பறம் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சி ரிப்ளை பண்ணுங்க. அதுக்காக அனானி கமெண்ட் எல்லாம் போட்டுக்க வேண்டாம். அது ரொம்ப ஆடா இருக்கும்.

    மூ.ப: நாங்க எல்லாம் அதிகமா இதுல கான்சண்ட்ரேட் பண்றதில்லை.

    வெ: தெரியுதே! அப்பறம் தமிழ்மணம்ல வாசகர் பரிந்துரைல எப்படி கொண்டு வர வைக்கணும்?

    மூ.ப: நீயே பதிவ போட்டதுக்கப்பறம் ஒண்ண குத்திக்கோ.

    வெ:நானேவா?

    மூ.ப: ஆமாம் உன் பதிவு உனக்கே பிடிக்கலைனா வேற எவனுக்கு பிடிக்கும்?

    வெ: அதுவும் சரிதான்.

    மூ.ப: அப்படியே ஆபிஸ் போனதுக்கப்பறம் கூட ஒண்ணு போட்டோக்கோ. அப்பறம் ஆபிஸ்ல கூட இருக்கறவங்க ரெண்டு பேரை ஆளுக்கு ஒண்ணு குத்த சொல்லு. அவ்வளவுதான் ஈஸியா வந்திடும்.

    வெ: அப்படினா நிறைய குத்திடலாமே…

    மூ.ப: ஓவர் சீன் உடம்புக்காகாது. மக்கள் “-” குத்தி கொன்னுடுவாங்க. அதனால அளவா ஆடணும். ஓகேவா?

    வெ: சரி. அப்பறம் தேன்கூடுல அதிகம் பார்வையிடப்பட்ட பகுதில எப்படி வர வைக்கறது?

    மூ.ப: அதுவும் ஒரு டெக்னிக் தான். போட்டவுடனே நீயே ஒரு பத்து தடவை க்ளிக் பண்ணு. அப்பறம் ப்ராஜக்ட்ல இருக்கற 2 பேர் சிஸ்டம்ல போய் உக்கார்ந்து ஒரு 10 தடவை பண்ணு. அவ்ளோதான்…

    வெ: ஆஹா. ஊர்ல இருக்கற ஃபிராடுத்தனம் எல்லாம் பண்ணனும் போல இருக்கே!

    மூ.ப: இதெல்லாம் ரொம்ப பண்ணா உன்னைய நாரடிச்சிடுவாங்க. நீ கேட்டியேனு சொன்னேன். எப்பவும் அடக்கமா இருந்தாதான் பெருமை.

    வெ: அதுவும் உண்மைதான். சரி இந்த பூங்கா, கில்லி பரிந்துரைல எல்லாம் வரது எப்படி?

    மூ.ப: பூங்கால வரணும்னா மேலோட்டமில்லாத ஆழமான விமர்சனம் பண்ணனும்

    வெ: நாந்தான் தெலுகு படமெல்லாம் பண்றனே. அது வர மாட்டீங்குதே!!!

    மூ.ப: வெட்டி? உனக்கு சனி உன் வாயில தான். அவர் சொல்றது ஏகாதிபத்யம், அடக்குமுறை இந்த மாதிரி விஷயங்களை விமர்சிக்கணும்.

    வெ: அப்படினா?

    மூ.ப: உனக்கு அதெல்லாம் புரியாது.

    வெ: சரி, கில்லில?

    மூ.ப: பொண்ணுங்களை ஜொள்ளுவிடற மாதிரி இருந்தா வந்திட போகுது… என்னங்க நான் சொல்றது கரெக்ட் தானே?

    வெ: ஆமாம் என்னுடைய ஆர்க்குட் அலம்பல் வேற வந்திருந்துச்சு…

    மூ.ப: சரி வெட்டி இதையெல்லாம் தேவையான இடத்துல பயன்படுத்தி பெரிய ஆளாகணும். புரியுதா?

    வெ: பாக்கலாம்… வண்டி எத்தனை நாள் ஓடுதுனு…

    மக்களே!!! நாளை காலை எப்படியும் வலைப்பதிவர் சந்திப்பை பற்றிய பதிவு வரும்… அதுவரை இதுல இருக்கற மேட்டர நல்லா மனப்பாடம் பண்ணிக்கோங்க.

    ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் – மீள்பதிவு

    மேலும் சில தகவல்களுடன்…
    செந்தழல் ரவி அவர்களின் பதிவை மீண்டும் ஒரு முறை இங்கே பதிப்பிக்கிறேன்…

    இதுவரை எந்த பதிவை எழுதுவதற்க்கு முன் யோசித்ததில்லை…அதிகபட்சமாக
    பத்து நிமிடத்தில் கடகடவென டைப்செய்வதுதான்…ஆனால் இதனை எழுதுமுன் தினறல்…பெரிய யோசனை…எப்போது பப்ளிஷ் செய்யலாம்….இதனை வலைப்பூவினர் வரவேற்ப்பார்களா ? வெற்றிகரமாக செய்ய முடியுமா ?

    ஏற்கனவே என்றென்றும் அன்புடன் பாலா நிறைவாக செய்தாரே !! நம்மாலும்
    முடியும் – என்ற உந்துதல் ஏற்பட – முதலில் ஒரு பதிவரிடம் சொன்னபோது அவர் மிகச்சிறந்த வழிகாட்டுதலை தந்தார்…இவ்வளவு பீடிகை வேண்டாம் இல்லையா…விஷயத்துக்கு
    வந்துவிடுகிறேன்…!!!

    சமீபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நன்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கடந்த வாரம் – கல்விக்காக பணம் கட்டமுடியாததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாணவியை பற்றி கூறினார்…இதயம் கனத்துப்போனது…இதனை நம் வலைப்பூவினரிடம் கூறி
    தேவையான நிதியை திரட்டி அந்த மாணவியின் கல்விக்கண் திறந்தாலென்ன என்ற எண்ணம் உதயமானது…!! அதை செயல்படுத்துமுகத்தான் இந்த பதிவு…

    திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்…எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது தான் இந்த நிகழ்வு அந்த பெண்ணுக்கு…தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்…ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்…தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்… இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை….மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்…

    இந்த சமயத்தில் நம் உள்ளத்தில் எழும் சாதாரண கேள்விகள் என்ன ? இந்த பெண் உண்மையிலேயே உதவியை பெற தகுதி உள்ளவரா ? நாம் கொடுக்கும் நிதியை இவர் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம் ? இந்த விவரங்களை சரிபார்த்தது யார் ? மாணவியின் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டனவா ? இந்த மாணவிக்காக நாம் அளிக்கும் நிதி சரியாக கல்லூரி கட்டணத்தை செலுத்த பயன்படுத்தப்படுமா ? என்பன போன்றவையே…

    வலையுலகின் மூத்த பதிவரும் நம் அனைவரின் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவருமாகிய பதிவர் ஞானவெட்டியானை அவரது இல்லத்தில் நேற்று மாலை மாணவி மகாலட்சுமி சந்தித்தார்…அய்யா அவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்ததோடல்லாமல் முழு இதயத்தோடு இந்த மாணவிக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார்…..

    இப்போது நமது திட்டம் என்ன ? ஞானவெட்டியான் அய்யா அவர்கள் முகவரிக்கு வங்கி வரைவோலையை / காசோலையை அனுப்பிவிட்டால் அவர் அதை தொகுத்து கல்லூரியிலேயே கட்டிவிடுவதாக கூறி இருக்கிறார்…அவரது விவரங்கள் (N.JAYACHANDRAN – a/c @ SBI – NEHRUJI NAGAR.)

    அவரது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
    njaanam@gmail.com
    0451-2436844

    வங்கி கணக்கு

    N.JAYACHANDRAN
    SBI Account No: 10261284116
    NEHRUJI NAGAR
    DINDUKKAL

    அனுப்பியபிறகு தனக்கு ஒரு மடல் அனுப்புமாறு ஞானவெட்டியான் கேட்டுள்ளார்..அவரது மின்னஞ்சல் மீண்டும் njaanam@gmail.com

    ஐசிஐசியை வங்கி கணக்கு தேவையுள்ளது என்று தெரிந்துள்ளதால் என் ஐசிஐசிஐ வங்கி கணக்கையும் தருகிறேன்…

    ICICI A/C : 625301514495
    Branch : Kumar Park Branch
    Name : Ravindran A

    எனக்கு ஒரு மடலும் அனுப்பி தகவலை தெரிவித்துவிட்டால் நன்றாக இருக்கும்…
    zyravi@yahoo.com

    உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்…!!!

    பின்னூட்டத்தில் வினவிய நன்பருக்காக – மாணவியின் மொத்த தேவைப்பாடு ரூ அறுபது ஆயிரம் !!!! வேறு ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்…மேலும் சில பின்னூட்டங்களை பார்த்ததும் தமிழர் நெஞ்சில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை என்பதை அறிந்தேன்…நெஞ்சு நெகிழ்கிறது..

    புது வெள்ளம்!!!

    1904ஆம் ஆண்டு நாசிக் நகரில் ப்ளேக் நோய் தாக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலமாயினர். உயிருக்கு பயந்து ஊரை விட்டு பலர் காலி செய்தனர். ப்ளேக் நோயால் இறந்தவர்களை தொடவே அவர்கள் உறவினர்களும் அஞ்சினர். அந்த நிலையில் ஊரில் பெருவணிகனாக இருந்த 25 வயதே நிரம்பிய ராகுல் சின்ஹா என்பவர் களமிறங்கி இறந்தவர்களை தன் முதுகில் சுமந்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்றார். இதை பார்த்து அவருடைய நண்பர்களும் அவருக்கு உதவினர்.

    1909ல் 9 வயதில் திருமணம் செய்து, கணவனை இழந்த, தன் சகோதரியின் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்து புரட்சியை ஏற்படுத்தினார்.

    நாசிக் நகரின் சிறப்பு மாஜிஸ்ட்ரேட்,நகர வங்கி, மத தேவஸ்தான அறக்கட்டளை தலைவர் போன்ற 29 துறைகளுக்கு தலைவராக பணியாற்றிய அவர் காந்திஜியின் வழி சேர்ந்து நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து பதவிகளையும் தூக்கியெறிந்தார்.

    ஒரு பவுன் 10 ரூபாய் பெறாத அந்த காலத்தில் வருடத்திற்கு 20,000 ஈட்டும் குடும்ப தொழிலை விட்டு நாட்டு விடுதலையில் பங்கு கொண்டார். நாசிக் நகரில் ஆங்கிலேயரால் முதன் முதலில் 144ல் கைதி செய்யப்பட்டார். அதன் பிறகு காந்திஜியின் அறைகூவலை ஏற்று அன்றிலிருந்து அவர் கதராடையையே உடுத்த ஆரம்பித்தார். அவரது குடும்பத்தினறையும் அவ்வாறே செயல்பட வைத்தார்.

    கள்ளுக்கடை மறியலை காந்திஜி துவங்குவதற்கு காரணமே இவரின் மனைவியும், தங்கையும் தான். கள்ளுக்கடை மறியலையும் தானே முன்னின்று நடத்தினார். மேலும் கள் உற்பத்திக்காக தன் நிலத்தில் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட மரத்தை வெட்டி வீழ்த்தினார்.

    மகாராஷ்ட்ரா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராகவும் 4 ஆண்டுகள் தலைமை ஏற்று நடத்தினார். இடஒதுக்கிட்டீன் தேவையை முதன்முதலில் பறை சாற்றியவரும் இவரே. மகாராஷ்ட்டிரத்தில் நிலவிய தீண்டாமையை ஒழிக்க இவர் போராடிய அளவிற்கு யாருமே இந்தியாவில் போராடியதாக தெரியவில்லை.

    இவர் கட்சி தலைமை பதவி வகித்திருந்தாலும் ஆட்சியில் அமர முற்பட்டதில்லை. இவர் விருப்பப்பட்டிருந்தால் எளிதாக முதலமைச்சராகியிருக்கலாம். ஆனால் பதவியை இவர் விரும்பவில்லை. செல்வ சீமானான இவருக்கு பணத்திலும் விருப்பமில்லை. பிற்காலத்தில் காந்திஜியின் பாதையையே தவறென்று கடுமையாக சாடினார். புகழுக்கு ஆசைப்பட்டிருந்தால் காந்திஜிக்கு ஜால்ரா போட்டு மென்மேலும் புகழடைந்திருக்கலாம். ஆனால் இவருக்கு பணம், பெயர், புகழ் எதிலும் ஆசையில்லை. போராட்டமே இவர் வாழ்க்கையாக இருந்தது.

    எந்த மனிதனும் மற்றவனுக்கு குறைந்தவனில்லை என்று உரக்க கூவினார். மனிதனே மனிதனை அடிமைப்படுத்துவதை எதிர்த்து போராடினார். இதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் அடித்து நொறுக்கி அவனுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கினார். அது விநாயகர் சிலையாக இருந்தாலும் சரி இராமர் திருவிக்ரகமாக இருந்தாலும் சரி.

    “நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
    நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?”

    இதை புரிந்தவர்களுக்கு அவரின் செயல் எந்த விதத்திலும் தவறாக படாது. இந்து மதத்தில் புரையோடிக்கிடந்த தவறுகள் இவரால் அடித்து நொறுக்கி சீர்பட்டன. தேங்கி கிடந்த குட்டையில் புதுவெள்ளம் பாய்ந்து அதை தூய்மை செய்தது.
    கோவிலுக்கு வெளியே நின்று வணங்கியவர்கள் கோவிலுக்குள் சென்று வழிபட வழி பிறந்தது.

    எரிமலைகள் வெடிக்கும் போது ஒரு சில ரோஜாக்களும் கருகுவதை போல இவரின் போராட்டத்தால் ஒரு சிலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவருடைய ஒரு சில கொள்கைகளில் தவறிருக்கலாம். அதை இவரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். நானும் உங்களை போல ஒரு சாதாரண மனிதன்தான் என்று. இவரின் போராட்டங்கள் எதுவும் அவருடைய சுயநலத்திற்காக செய்யப்படவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். கடைசி வரை மக்களின் உண்மையான விடுதலைக்காகவும், சுயமரியாதைக்காகவுமே போராடினார்.

    சரி இப்போது சொல்லுங்கள் இந்த நபர் நல்லவரா? கெட்டவரா?

    நண்பர்களே ஒரு சிறு தவறு ஏற்பட்டுவிட்டது. மேலே நீங்கள் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் ஒருமுறை படிக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
    தவறான சொல் – சரியான சொல்
    நாசிக் – ஈரோடு
    ராகுல் சின்ஹா – ஈ.வே.ராமசாமி (@) பெரியார்
    மகாராஷ்ட்ரா – தமிழ்நாடு

    எதுக்கு இவன் பேரை மாத்தி போட்டானு பாக்கறீங்களா? ஒரு சிலர் இந்த பேரை கேட்டவுடனே மனசுக்கு முன்னாடி ஒரு இரும்பு திரையை போட்டுக்கறீங்க. வாழ்க்கை முழுதும் சுயநலம் பாராமல் போராடிய ஒருவனை வெறும் கடவுள் மறுப்பு கொள்கைகளில் அடைத்து வைக்க முடியாது.
    வரும் 24ஆம் தேதி அவரின் மறைந்த நாளை முன்னிட்டு இந்த பதிவை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.

    பின்குறிப்பு:
    இந்த பதிவிற்கு சாதி பெயர்களுடனோ, பெரியாரை தரக்குறைவாக தாக்கி வரும் பின்னூட்டங்களோ வெளியிடப்படமாட்டாது.