அனைவரின் ஆசிகளுடன், வாழ்த்துக்களுடனும் சீரும் சிறப்புமாக அருண்-தீபாவின் திருமணம் நடந்து முடிந்தது. ஒரு வாரம் தீபாவின் வீட்டிலும், அவள்
உறவினர்கள் வீட்டிலும் பலமாக விருந்து நடைபெற்றது. அடுத்த வந்த வார இறுதியில் தம்பதிகள் இருவரும் அருணின் சித்தப்பா வீட்டில் ஏற்பாடு செய்த விருந்திற்கு சென்றிருந்தனர்.
அங்கே அவனுக்கு கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் தங்கையும், பதினோராம் வகுப்பு படிக்கும் தம்பியும் இருந்தார்கள். காலை டிபன் முடிந்து அனைவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தனர். சித்தப்பா வெளியே செல்ல…
“அம்மா… நீ போய் சீக்கிரம் சமைமா. நாங்க அண்ணன்டயும், அண்ணிட்டயும் பேச வேண்டியது நிறைய இருக்கு” அருணின் தங்கை சுமதி.
“அப்படி என்ன பேச போறிங்க ரெண்டு பேரும்?”
“சாப்ட்வேர் கம்பெனில எப்படி வேலை செய்வாங்கனு கேட்டு தெரிஞ்சிக்க போறோம். அதெல்லாம் உனக்கு புரியாதுமா. நீ சீக்கிரம் போய் சமை.
இவனுக்கு இப்பவே பசிக்குதாம்” அருகிலிருக்கும் தம்பியை காட்டி சொன்னாள்.
“ஆமாமா. எனக்கு இப்பவே பசிக்குது. நீ சீக்கிரம் போய் சமைமா” தம்பி கௌதம்.
“சரிடா கண்ணு. அம்மா சீக்கிரம் ரெடி பண்ணிடறேன்” சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றாள் அருணின் சித்தி.
“அப்பாடா… அம்மா போயிட்டாங்க. இப்பதான் ஜாலியா பேச முடியும். அண்ணி நீங்க அண்ணனை முதல்ல எங்க பார்த்தீங்கனு ஞாபகம் இருக்கா?”
“அடிப்பாவி இதுக்கு தான் சித்திய உள்ள போக சொன்னியா?” வேகமாக கேட்டான் அருண்
“அண்ணா. நான் உங்கிட்ட கேக்கல. நீ சும்மா இரு. நீங்க சொல்லுங்க அண்ணி” ஆர்வமாக கேட்டாள் சுமதி
முகத்தில் வெட்கத்துடன் பேச ஆரம்பித்தாள் தீபா… “பெங்களூர்ல… சிவாஜி நகர்ல”
“பராவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கியே” செல்லமாக பேசினான் அருண்
“அப்படினா… நீங்க வேலைக்கு சேறதுக்கு முன்னாடியே பழக்கமா?” முன்பை விட ஆர்வமாக கேட்டாள் சுமதி
“பழக்கம் தான்.. ஆனா அது வேற மாதிரி” கொஞ்சம் ஸ்டைலாக பதில் சொன்னான் அருண்
“அண்ணா.. நீ பேசன அவ்வளவுதான். நான் அவுங்ககிட்ட தானே பேசிக்கிட்டு இருக்கேன்” கொஞ்சம் சீரியஸாக பேசினாள் சுமதி
“சரி. அப்ப நான் வெளிய போயிடுவா?”
“உனக்கும் கேள்வி வரும். அப்ப நீ பதில் சொன்னா போதும். ஓகேவா?”
“சரிம்மா…”
“நீங்க சொல்லுங்க அண்ணி. அண்ணன் அன்னைக்கு உங்ககிட்ட என்ன பேசினாரு?
தீபா நீ அழகா இல்லைனு நினைக்கிறேன். உன்னை எனக்கு பிடிக்கல. நான் உன்னை காதலிக்கல. ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கனு
சொன்னாரா?”
“யாரு உங்க அண்ணனா? கிழிஞ்சிது. நான் அங்க பாவமா இருந்த பசங்களுக்கு இட்லி வாங்கி கொடுத்தது பிடிக்காம இதெல்லாம் பண்ண கூடாதுனு
அப்பவே அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு”
“ஏய் நான் அதிகாரம் எல்லாம் பண்ணல. அது தப்புனு தான் சொன்னேன்” வேகமாக சொன்னான் அருண்
“எது தப்பு? பாவமா இருக்கற பசங்களுக்கு சாப்பாடு கொடுக்கறது தப்பா?” தீபாவிற்கு துணைக்கு நின்றாள் சுமதி
“சரி நான் பேசல. நீங்களே பேசுங்க. நான் அப்பறமா சொல்றேன்” சூழ்நிலை சரியில்லாததால் ஒதுங்கி கொண்டான் அருண்.
“அப்பறம் நீங்க அண்ணனை பத்தி என்ன நினைச்சீங்க அண்ணி”
“வேண்டாம்மா… அத சொன்னா இங்கயே பிரச்சனையாயிடும்”
“அண்ணி.. அண்ணன் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு. அதுவும் அப்ப அவர் உங்களுக்கு தெரியாதவர் தானே. தாராளமா சொல்லுங்க”
“இப்படி அதிகாரம் பண்றானே. இவனுக்கு பொண்டாட்டியா வரவ பாவம்னு நினைச்சுக்கிட்டேன்”
“அப்பறம்”
“அப்பறம் என்ன மறுபடியும் குருப் டிஸ்கஷன்ல பார்த்தேன்”
“வாவ்!!! ரெண்டு பேரும் எதிர் அணிதானே”
“பின்ன… நான் கொடுத்த தலைப்பு வேண்டாம்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தனவுடனே எனக்கு கோபம் தாங்கலை. ஆனா எல்லார் பேரையும் நியாபகம் வெச்சி பேசனவுடனே கொஞ்சம் அசந்துட்டேன். மேல் மாடில கொஞ்சம் கொஞ்சம் இருக்கு அதனால தான் தலைகனம்னு
நினைச்சிக்கிட்டேன்”
“ஓ! சரி… அண்ணா இப்ப நீ சொல்லு… அண்ணி அதுல என்ன பேசினாங்க?”
“அதுவா… முதல்ல நான் இவளை எப்படியாவது தோக்க வைக்கணும்னு தான் தலைப்பையே மாத்தினேன். ஆனா இவ பேசாமலே இருந்தது எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி… பேசினா எப்படியும் சண்டை போட்டு ஜெயிக்கலாம்னு பார்த்தேன். ஆனா இவ பேசவே இல்லை. அதனால கடைசியா
முடிவுரை கொடுக்க சொன்னேன். அதுல எல்லாரும் அசர மாதிரி பேசினா”
“அப்பவே உனக்கு பிடிச்சி போச்சா?”
“அதெல்லாம் இல்லை… எப்ப புடிச்சிதுனு கரெக்டா சொல்ல தெரியாது”
“அண்ணா.. பொய் சொல்லாத. ஒழுங்க சொல்லு”
“நிஜமா. வேணும்னா உங்க அண்ணியையே கேட்டு பாரு”
“அண்ணி நீங்க சொல்லுங்க. அண்ணனை உங்களுக்கு எப்ப பிடிச்சிது?”
“அப்படி ஒரு இடத்தை சொல்ல முடியாது. நிறைய இடமிருக்கு…”
“அண்ணி கொஞ்சம் சொல்லுங்களேன்.. ப்ளீஸ்”
தீபா அருணை தர்ம சங்கடமாக பார்க்க… அவன் கண்களாலே சம்மதமளித்தான்…
“நான் போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே என்னை ராஜிக்கூட உக்கார வைச்சது, ராஜியையும் கார்த்தியும் சேத்து வெச்சது, ஒரு பொண்ண வண்டீல உக்கார வெச்சி ஓட்டறதுக்கு கூச்சப்பட்டது, எனக்கு அடிப்பட்டவுடனே கூடவே இருந்து கவனிச்சிக்கிட்டது. எங்க அம்மாவை எந்த வேலையும் செய்யவிடாம ஹாஸ்பிட்டல பாத்துக்கிட்டது. இப்படி நிறைய சொல்லிட்டே போகலாம்…” சொல்லிவிட்டு அருணை பார்த்து அவள் புன்னகைத்தாள்.
அருணும் சந்தோஷத்தில் வானில் பறந்து கொண்டிருந்தான்…
“அண்ணி நீங்க போய் பக்கத்துல உக்கார்ந்தவுடனே வேற ஒருத்தவங்கள உங்க பக்கத்துல உட்கார சொன்னதுக்கு உங்களுக்கு கோபம் வரல”
“எனக்கு கோபம் தான். முதல்ல பாதி நாள் நான் தப்பா தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். இவர்கிட்ட பேசவே கஷ்டமா இருக்கும். என்னடா எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கானேனு கடுப்பா இருக்கும்… ஆனா போக போக புரிஞ்சிக்க ஆரம்பிச்சவுடனே எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு”
“ஆமாம் எதுக்கு இப்படி விசாரிச்சிட்டு இருக்க? நீ எதாவது பண்றியா? காலேஜ்ல படிக்கும் போது இதெல்லாம் பண்ணக்கூடாது. தப்பு. புரியுதா? அண்ணனாக மாறி தங்கைக்கு அறிவுருத்தினான் அருண்
“அதெல்லாம் இல்லைனா. எங்க காலேஜ் மேகசின்ல போட ஒரு கதை எழுதலாம்னு பார்த்தேன். சரி உங்க கதையே இண்ட்ரஸ்டிங்கா இருக்கேனு கேட்டுக்கிட்டு இருந்தேன்”
“அடப்பாவமே! காலேஜ் மேகசின்ல எதெல்லாமா போடுவாங்க?” தீபாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது…
“அதெல்லாம் போடுவாங்க… அந்த மேகசின் எடிட்டர் எங்க சீனியர்தான். என்ன பார்த்து எப்பவும் வழிஞ்சிக்கிட்டே இருப்பாரு. அதனால நான் போய் கொடுத்தா கண்டிப்பா போட்ருவாரு. சரி கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?”
“என்ன வைக்கலாம்?” அருணும் தீபாவும் யோசித்து கொண்டிருந்தனர்.
சரியாக அந்த நேரம் பார்த்து அருணின் சித்தப்பா வீட்டிற்கு வந்தார். கையில் ஒரு பேப்பர் போட்டலம் இருந்தது.
“அப்பா கைல என்ன பொட்டலம்? பகோடாவா?” ஆர்வமாக விசாரித்தான் கௌதம்
“வர வழியில ஒரு பாட்டி நெல்லிக்காய் வித்துட்டு போச்சு. சரி இந்த வெயில்ல வித்துட்டு போகுதேனு வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க எல்லாம் சாப்பிடுங்க” வீட்டு மருமகளிடம் கொடுத்தார் சித்தப்பா…
“ஐயோ! அப்பா நெல்லிக்காய் கசுக்கும்பா. அதுக்கு பதிலா பகோடா வாங்கிட்டு வந்துருக்கலாம்” முகத்தில் வெறுப்புடன் சொன்னான் கௌதம்.
“நெல்லிக்காய் தாம்பா உடம்புக்கு நல்லது. அதுல விட்டமின் C இருக்கு.
அதுவுமில்லாம நெல்லிக்காய் சாப்பிடும் போதுதான் கசக்கும் சாப்பிட்டு முடிச்சு தண்ணி குடிச்சா அமிர்தம் போல இனிக்கும்“
இதை கேட்டவுடன் அருண், தீபா, சுமதி மூவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்து கொண்டனர்…
Filed under: தொடர் - நெல்லிக்காய் | 41 Comments »